Thursday, February 10, 2011

கொந்தளிக்கும் உலகம்





உலகமய பொருளாதாரக் கொள்கை உலக அளவில் நடைமுறைப்படுத்தப்பட்டபிறகு நாடு களுக்கு இடையிலான பொருளாதார இடை வெளி அதிகரித்து வருகிறது. அத்துடன் ஒவ்வொரு நாட்டின் மக்களுக்கு இடையிலான இடைவெளியும் அதிகரித்து வருகிறது. இதன் விளைவுகளை பல்வேறு நாடுகள் சந்திக்கத் துவங்கியுள்ளன.

உலக வங்கி, சர்வதேச நிதியம், உலக வர்த்தக அமைப்பு போன்ற ஏகாதிபத்திய நிழல் நிறுவனங்கள் தாராளமய பொருளாதாரக் கொள்கையை வளர்முக நாடுகளின் மீது திணித்து வருகின்றன. இந்தக்கொள்கை முதலாளித்துவச் சுரண்டலின் செயல்வடிவமாக உள்ளது. முதலாளிகளின் லாபத்தைப் பற்றி மட்டுமே தாராளமய, தனியார்மயக் கொள்கை கவலைப்படுகிறது. பெரும்பகுதி உழைக்கும் மக்களைப் பற்றியோ, அவர்களது வாழ்க்கைத்தரம் பற்றியோ இந்த கொள்கையை செயல்படுத்துபவர்களுக்கு கவலை இல்லை.

விவசாயத்துறை கார்ப்பரேட்மயமாக்கப்பட்டு வருகிறது. உழவர்களின் பாரம்பரிய உரி மையான விதை உரிமை கூட பன்னாட்டு நிறு வனங்களின் வசமாகிவிட்டது. உரம், பூச்சி மருந்து போன்ற இடுபொருட்களும் பன்னாட்டு நிறுவனங்களைச் சார்ந்தே உள்ளது. உணவுதா னிய உற்பத்தி புறக்கணிக்கப்பட்டு ஏற்றுமதி சார்ந்த பணப்பயிர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இதனால் உலக அளவில் அத்தியாவசியப் பொருட்களின் விலை, குறிப்பாக உணவுதானியப் பொருட்களின் விலை கடு மையாக உயர்ந்துள்ளது.

விலைவாசி உயர்வால் உலக அரசியலில் குழப்பம் ஏற்பட்டுள்ளது என்றும் பல்வேறு நாடுகளில் பட்டினிப்புரட்சி நடைபெறும் நிலை உள்ளது என்றும் ஐ.நா. சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு கூறியுள்ளது. சர்வதேச அளவில் கடந்த 20 ஆண்டுகளில் உணவுப் பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந் துள்ளது. 2008ம் ஆண்டில் 200 புள்ளியாக இருந்த உணவுப்பொருள்விலை குறியீடு, 2010ல் 231 புள்ளிகளாக அதிகரித்துள்ளது என்று அந்த அமைப்பு மதிப்பிட்டுள்ளது.

டுனீசியாவில் அரசுக்கு எதிராக வெடித்த கிளர்ச்சிக்கு மிக முக்கிய காரணங்களில் ஒன்று விலைவாசி உயர்வு. எகிப்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் தொடர்ச்சியாக வெடித்துவரும் மக்களின் கோபாவேச போராட்டங்களுக்கு விலைவாசி உயர்வும் பிரதான காரணங்களில் ஒன்றாக உள்ளது என்பதை மறுக்க முடியாது.

மக்களை ஆடு மாடுகள் போல நினைத்துக் கொண்டு, அவர்களது வயிற்றைப்பற்றி கொஞ்சம் கூட கவலைப்படாமல் முதலாளிகளின் மூலதனத் தொப்பையைப் பற்றியே ஆட்சியாளர்கள் கவலைப்பட்டால் என்ன நடக்கும் என்பதற்கு எகிப்து உதாரணமாக உள்ளது.

தாராளமய பொருளாதாரக்கொள்கையின் மீது தாளாத காதல் கொண்டுள்ள இந்திய ஆட்சி யாளர்களுக்கும் இது ஒரு எச்சரிக்கையாகும். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்காமல், எங்களிடம் மந்திரக் கோலா இருக்கிறது என மத்திய ஆட்சியாளர்கள் எகத்தாளம் பேசி வருகின்றனர்.

மக்கள் சக்தி எனும் மந்திரக்கோல் மகத்தான மாற்றங்களை உருவாக்கியுள்ளது என்பதுதான் வரலாறு என்பதை ஆட்சியாளர்கள் உணர்ந்து கொள்ளவேண்டும்.

நன்றி : மாற்று .காம்

No comments:

Post a Comment