Thursday, March 27, 2014

செய்வீர்களா?.... நீங்கள் செய்வீர்களா?

 






"ஆட்சிக்கு வந்து மூன்று வருடமாகிறது.  தமிழகத்தை மின்மிகை மாநிலமாக நீங்கள் மாற்றுவதாகச் சொன்னதைக் கூட நாங்கள் மறந்துவிடுகிறோம். மின்வெட்டைக் குறைப்பதற்காவது நடவடிக்கை எடுங்கள். செய்வீர்களா?.... நீங்கள் செய்வீர்களா?”

“ அம்மாவின் பெயரால் குறைந்த விலைக்கு சாப்பாடு, தண்ணீர் எல்லாம் கொடுக்கிறீர்கள். அதுபோல தாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் கடுமையாக ஏற்றிய பால்விலை, பஸ் டிக்கெட், மின்சாரத்தையும் அம்மாவின் பெயரால் மலிவு விலைக்கு வழங்கி, செய்த பாவத்துக்கு புண்ணியம் தேடலாமே. செய்வீர்களா?.... நீங்கள் செய்வீர்களா?”

“இலவசமாய் ஆடு கொடுத்ததும் போதும், மாடு கொடுத்ததும் போதும். தாங்கள் மத்திய அரசில் அங்கம் வகித்தால் இலவசமாய் கல்வி கொடுக்க ஏற்பாடு செய்யுங்களேன். செய்வீர்களா?.... நீங்கள் செய்வீர்களா?”

“நான் அங்கம் வகிக்கும் மத்திய அரசு இந்தியாவின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் என்றும்  தமிழக மீனவர்களின் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்றும்  கச்சத் தீவை மீட்கும் என்றும் திரும்பத் திரும்ப ஒப்பிக்கிறீர்கள். அதெல்லாம் இருக்கட்டும். முதலில் இந்த அண்ணா நூலக இடமாற்றத்தை கைவிடலாமே. செய்வீர்களா?.... நீங்கள் செய்வீர்களா?”

“காங்கிரஸின் தவறான ஆட்சியில் இந்தியாவின் பொருளாதாரமே சீர்குலைந்துவிட்டதாகவும், நாட்டு மக்களெல்லாம் அவதிப்படுவதாகவும் கூட்டத்துக்கு கூட்டம் ஆவேசமாகப் பேசி வருகிறீர்கள். தவறான ஆட்சிக்கு முக்கிய காரணமே,  சில முதலாளிகளின் நலன்களுக்காக பெரும்பான்மை மக்களை வாட்டி வதைக்கும் தனியார்மயத்தை காங்கிரஸ் ஆதரித்த போக்குத்தான். தாங்கள் நல்லாட்சி செய்ய வேண்டுமென்றால் அந்த தனியார் மயத்தை கைவிட வேண்டி வரும். செய்வீர்களா?.... நீங்கள் செய்வீர்களா?”

“மக்கள் ஒற்றுமைக்கு எதிரான கட்சி பா.ஜ.க என்றும், பா.ஜ.க ஆட்சிக்கு வருவது பிளவு வாத சக்திகளை மேலும் ஊக்குவிக்கும், நாட்டுக்கு பேராபத்து காத்திருக்கிறது என்றும் முற்போக்கு சக்திகள் அனைத்தும் எச்சரிக்கின்றன.   தாங்களும் பிளவுவாத சக்திகளை முறியடித்து இந்தியாவின் ஒற்றுமையை பாதுகாப்போம் என ஜான்சிராணி போல சூளுரைக்கிறீர்கள். அப்படியென்றால் பா.ஜ.கவுடன் ஒருபோதும் கூட்டு இல்லை என அறிவிக்கலாமே. செய்வீர்களா?.... நீங்கள் செய்வீர்களா?”

நன்றி : மாதவராஜ்

No comments:

Post a Comment