Sunday, December 12, 2010

பிரதமருக்கு தெரியாமல் நடந்ததா?

_______________
"திருவாளர் பரிசுத்தம் என்று மன் மோகன்சிங் குறித்து ஊடகங்கள் கட்டமைத்த பிம்பம் உருகிக் கரைந்தோடிக் கொண்டிருக்கின்றது. குழாயிலிருந்து தண்ணீர் கொட்டிக் கொண்டிருக்கும் போது உங்களால் தரையை ஈரமில்லாமல் வைத்திருக்க முடியாது."
_______________
கேள்வி: பிரதமருக்கோ அல்லது நிதியமைச்சருக்கோ என்ன நடக்கின்றது என்பது தெரியாமல் இருப்பதற்கு வாய்ப்பிருக்கின்றதா? அவர்கள் நிதித்துறையைச் சேர்ந்தவர்கள். அவர்கள் ஏன் எச்சரிக்கை அடையவில்லை?

பதில் : அவர்களுக்குத் தெரியாமல் இருப்ப தற்கு வாய்ப்பே இல்லை. அவ்வளவு கடிதப் போக்குவரத்து நிகழ்ந்துள்ளது. தொலைத் தொடர்புத் துறைக்கு நிதியமைச்சகத்திலிருந்து கடிதம் எழுதப்பட்டுள்ளது. அலைக்கற்றை ஏலம் விடப்படவேண்டும் என்று போட்டிகளுக்கான செயலாளர் வினோத்தால் தொலைத் தொடர்புத் துறைக்குக் கடிதம் எழுதியுள்ளார். ஊடகங்களில் இது பற்றி விவாதிக்கப்பட்டிருக்கின்றது. 2008 மற்றும் 2010 ஆகிய வருடங்களில் இரண்டு முறை நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு இது பற்றித் தெரியாது என்பது மித மிஞ்சிய கற்பனையாகத்தான் இருக்க முடியும்.

என்னென்ன சாக்குப் போக்குகள் சொல்கிறார்கள் என்று பார்ப்போம். மற்றவர்கள் என்ன செய்தார்களோ அதையே தான் செய்ததாகவும், ஒழுங்குமுறை ஆணையம் (தொலைத் தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம்) என்ன பரிந்துரைத்ததோ அதையே தான் செய்ததாகவும் ராசா கூறுகின்றார். இது உண்மை என்று ஒரு நிமிடம் கருதிக் கொள்வோம். (யாரையும் சாராமல்) சுயேச்சையாகச் செயல்படும் ஒழுங்குமுறை ஆணையம் அளவற்ற நஷ்டம் ஏற்படுத்தும் ஒரு செயலைப் பரிந்துரைத்திருக்கின்றது. அதற்காக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டாமா? இரண்டாவது கேள்வி என்னவென்றால், கண்கூடாக அவ்வளவு பெரிய இழப்பு ஏற்படும்போது அரசாங்கம் ஏன் ஒழுங்குமுறை ஆணையத்தின் பரிந்துரையை தன்னுடைய மேலதிகாரத்தைப் பயன்படுத்தி ரத்து செய்யவில்லை? அது மீறமுடியாத உண்மையாக எப்போதும் இருந்ததில்லை. இதற்கு முன்னர் பலமுறை அப்படி ரத்து செய்யப்பட்டிருக்கின்றது.

சந்தை விலைக்கு ஏன் புதிய உரிமங்கள் விற்கப்படவில்லை என்பதுதான் அடிப்படையான கேள்வி. தான் விலையை அதிகரித்திருந்தால் புதிய நிறுவனங்களால் போட்டியிட்டிருக்க முடியாது. ஏனெனில், ஏற்கனவே இருக்கும் நிறுவனங்கள் அலைக்கற்றையை மலிவான விலையில் பெற்றிருந்தார்கள் என்று ராசா கூறுகின்றார். ஹட்ச் நிறு வனத்திற்கு 12 பில்லியன் டாலர்கள் (1200 கோடி டாலர்கள்) கொடுத்த பின்னரும் வோடாபோன் நிறுவனத்தால் நிமிடத்திற்கு வெறும் 60 பைசா மட்டும் கட்டணம் விதிக்க முடிகிறது என்றால், ஏராளமான லாப விகிதம் இருக்கின்றது என்று பொருள். எனவே இந்த வாதம் தவிடுபொடியாகின்றது.

மேலே கேள்வி கேட்டது டெகல்கா வார இதழின் சோமா சௌத்ரி. பதில் சொன்னவர் மாநிலங்களவை உறுப்பினரும், இந்திய தொழில் மற்றும் வர்த்தகக் கூட்டமைப் பின் முன்னாள் தலைவருமான ராஜீவ் சந்திரசேகர். (டெகல்கா, டிசம்பர் 4, 2010).

அது மட்டுமில்லை, முன்னர் ஒரு தொலைத் தொடர்பு நிறுவனம் நடத்தி வந்தவர். இப்போது தகவல் தொழில்நுட்பத்திற்கான நாடாளுமன்ற நிலைக் குழுவின் உறுப்பினர். 2ஜி அலைக்கற்றை ஊழல் நடக்கப் போகின்றது என்று 2007ம் ஆண்டே இவர் பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளார் என டெகல்கா இதழ் தெரிவிக்கின்றது.

திருவாளர் சுப்பிரமணியம் சுவாமி ஏதோ தான்தான் இந்த ஊழலை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தவர் போலவும், யார் நல்லவர் அல்லது கெட்டவர் என்று தீர்மானிக்கிற தர முத்திரையை மக்கள் தன்னிடம்தான் தந்திருப்பது போலவும் பந்தா பண்ணிக் கொண்டிருக்கின்றார். சவடால் பேசிக் கொண்டிருக்கின்றார். பிரதமர் ரொம்ப நல்லவராம். அவருக்கு இதில் சம்பந்தம் இல்லையாம்.

முதலில் மார்க்சிஸ்ட் கட்சியாலும், பின்னர் மற்ற எதிர்க்கட்சிகளாலும் இரண்டு வருடங்களாக எழுப்பப்பட்டு வரும் ஒரு பிரச்சனையில், சர்வ வல்லமை படைத்த பிரதமர் இத்தனை நாள் வாயே திறக்காமல் இருந்தால் அதற்கு என்ன அர்த்தம்? கிட்டங்கிகளில் நாறும் உணவு தானியங்களைக் கொடுத்தாவது பட்டினி கிடக்கும் மக்களின் வயிற்றை நிரப்புங்களேன் என்று உச்சநீதிமன்றம் சொன்னால், கொள்கை விஷயத்தில் எல்லாம் நீங்கள் தலையிடாதீர்கள் என்று உச்ச நீதிமன்றத்திற்கே சொல்கின்ற அளவிற்கு அதிகாரம் படைத்த (?)மன்மோகன் சிங் இந்தப் பிரச்சனையை கண்டு கொள்ளாமல் இருந்திருக்கிறார் என்றால் அதற்கு என்ன பொருள்?

மொத்த பழியையும் ராசா மீது போட்டு விட்டு அல்லது திமுக மீது போட்டு விட்டு தனக்கு இந்தக் கொள்ளையில் கூட்டே இல்லை என்று காங்கிரஸ் தப்பிக்கப் பார்க்கின்றது. உண்மையில் பிரதமருக்குத் தெரியாமல் இது நடந்திருக்க வாய்ப்பே இல்லை என்று கருதுவதற்குப் போதுமான நியாயம் உண்டு. ஏனெனில் பிரதமருக்கு உள்ள அதிகாரம் அவ்வளவு.

முன்னாள் அமைச்சரவைச் செயலாளர் ஒருவர் பின்வருமாறு கூறுகின்றார். “இந்தியாவின் மொத்த அதிகார வர்க்கமும் இந்த நிகழ்வை அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருக்கின்றது. அரசாங்கத்தின் செயல்முறை விதிகள் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? யாரை முட்டாளாக்குகின்றீர்கள்? எந்த அமைச்சகத்திடமிருந்தும் எந்த கோப்பையும், எந்த ஆவணத்தையும் எடுத்துக்கொள்ள பிரதமருக்கு தங்கு தடையற்ற அதிகாரம் இருக்கின்றது. நிதி சம்பந்தப்படவை என்றால் நிதியமைச்சருக்கும் எந்த கோப்பையும் கேட்டு வாங்கும் உரிமை இருக்கின்றது.’’ (சிக்பிலாசபி நெட்வொர்க் இணையதளம்)

செயல்முறை விதிகளின்படி 500 கோடி ரூபாய்க்கும் அதிகமான எந்த முடிவும் அமைச்சரவையின் மூலம் மட்டுமே எடுக்கப்பட முடியும். இந்த இணையதளம் மேலும் கூறுகின்றது.

“2ஜி அலைக்கற்றை ஊழல் என்பது பிரதமர் அலுவலகத்தின் முழுத்தோல்வியாகும். இந்த அரசாங்கத்திற்குத் தலைவர் யார்? இந்திய மக்களுடைய நலன்களின் பாதுகாவலர் யார்? பிரதம மந்திரியின் முதன்மைச் செயலாளர் டி.கே.ஏ.நாயர் அல்லது அமைச்சரவைச் செயலாளர் போன்றவர்களுக்கு ராசா அச்சம், நாணம் இன்றி மேற்கொண்டு செயல்படுவதிலிருந்து தடுப்பதற்கு பத்து நிமிடங்கள் தான் ஆகும். நாயர் தொலை பேசியை கையில் எடுத்து தொலைத் தொடர்புத்துறையின் செயலாளரை உடனடியாகப் பிரதமரைச் சந்திக்கும்படிச் சொல்ல வேண்டும், அவ்வளவுதான்” என்று அந்த முன்னாள் அதிகாரி மேலும் கூறுகின்றார்.

ஆனால், அது நடக்கவில்லை. ஒரு வேளை அது நடந்திருக்குமோ என்கிற சந்தேகம் இருந்தால்,“எந்த ஐஏஎஸ் அதிகாரியாவது பிரதமரின் அலுவலகத் திலிருந்து வரும் அழைப்பை புறக்கணிக்க முடியுமா?’’என்று அதற்கும் அவரே பதில் கூறுகின்றார்.

யார் அமைச்சராக இருக்கலாம், கூடாது என்று தீர்மானிக்கும் அதிகாரம் முற்றிலும் பிரதமருக்கு உரியது. ‘பிரதமருக்கு இப்பிரச்சனையில் உண்மையிலேயே அக்கறை இருந்தது என்றால் அவர் நீண்ட காலத்திற்கு முன்னரே ராசாவை பதவி நீக்கம் செய்திருக்க வேண்டும்’ என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கும் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் கூறுகின்றார்.

திருவாளர் பரிசுத்தம் என்று மன் மோகன்சிங் குறித்து ஊடகங்கள் கட்டமைத்த பிம்பம் உருகிக் கரைந்தோடிக் கொண்டிருக்கின்றது. குழாயிலிருந்து தண்ணீர் கொட்டிக் கொண்டிருக்கும் போது உங்களால் தரையை ஈரமில்லாமல் வைத்திருக்க முடியாது.         

நன்றி : மாற்று . காம்

No comments:

Post a Comment