Wednesday, December 15, 2010

விக்கிலீக்ஸ் : ஜனநாயக சமூகத்தின் தேவை



ஒரு புதிய வகை இதழியலை விக்கிலீக்ஸ் முன்வைத்துள்ளது. விஞ்ஞான இதழியல் என்பதுதான் அது. மற்ற ஊடக அமைப்புகளோடு இணைந்து செய்திகளை மக்களுக்கு கொண்டு செல்லும் வகையில் நாங்கள் பணியாற்றுகிறோம். அதேவேளையில், அது உண்மையான செய்திதான் என்பதையும் நாங்கள் நிலை நிறுத்துகிறோம். செய்தியை நீங்கள் படிப்பதற்கு விஞ்ஞான இதழியல் அனுமதிப்பதோடு, இணையத்திலேயே "கிளிக்" செய்து அசல் ஆவணத்தையும் பார்த்துக் கொள்ள முடிகிறது. செய்தி உண்மையானதா ? பத்திரிகையாளர் துல்லியமாகச் செய்தியைத் தந்துள்ளாரா? இந்தக் கேள்விகளுக்கான விடைகளின் உண்மைத்தன்மையை நீங்களே தீர்மானித்துக் கொள்ளலாம்.

ஜனநாயக சமூகங்களுக்கு வலுவான ஊடகத்துறை தேவைப்படுகிறது. அத்தகையதுதான் விக்கிலீக்ஸ். நேர்மையாக அரசு இருப்பதற்கு விக்கிலீக்ஸ்உதவுகிறது. இராக் மற்றும் ஆப்கானிஸ்தான் போர்கள் பற்றி சில ஜீரணிக்க முடியாத உண்மைகளை விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தியது. பெருநிறுவனங்களின் ஊழல்கள் பற்றிய செய்திகளையும் வெளியிட்டது. நான் போருக்கு எதிரானவன் என்று மக்கள் கூறியுள்ளார்கள். நான் அப்படியில்லை. சில சமயங்களில் நாடுகள் போரைத் தொடுத்துதான் ஆக வேண்டும். ஆனால் அவை வெறும் போர்கள் மட்டுமே. அந்தப் போர்களைப் பற்றி மக்களிடம் பொய்களைச் சொல்வது, அதன்பிறகு எந்த மக்களிடம் அதைச் சொல்கிறோமோ அவர்களின் உயிரையும் பொருளையும் அந்தப் பொய்களுக்காக அர்ப்பணிக்கச் சொல்வதையும் விட பெரிய தவறு வேறு எதுவும் இருக்க முடியாது.

ஆப்கானிஸ்தான் மற்றும் இராக் போர்கள் பற்றிய விபரங்களையோ, அமெரிக்கத் தூதரங்களின் தகவல்களையோ அல்லது விக்கிலீக்ஸ் வெளியிட்ட வேறு எந்த செய்தியையோ நீங்கள் படித்தால், அனைத்து ஊடகங்களும் இத்தகைய செய்திகளை சுதந்திரமாக வெளியிட வேண்டிய முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்ளலாம். அமெரிக்க தூதரகத் தகவல்களை விக்கிலீக்ஸ் மட்டும் வெளியிடவில்லை. பிரிட்டனின் தி கார்டியன், தி நியூயார்க் டைம்ஸ், ஸ்பெயினின் எல் பய்ஸ் மற்றும் ஜெர்மனியின் டெர் ஸ்பீஜெல் ஆகியவையும் இவற்றைப் பிரசுரித்துள்ளன.

ஊருக்கு இளைத்தவன்தான் குறி

ஆனால் இந்த செய்திகளை ஒருங்கிணைத்த விக்கிலீக்ஸ்தான் தாக்குதல்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. தேசத்துரோகம் செய்து விட்டதாக அமெரிக்காவும், அதன் கூட்டாளிகளும் குற்றம் சாட்டியுள்ளார்கள். இத்தனைக்கும் நான் அமெரிக்கக் குடிமகனல்ல, நான் ஒரு ஆஸ்திரேலியக் குடிமகன். அமெரிக்காவின் சிறப்புப் படைகளைக் கொண்டு என்னைப் பிடிக்க வேண்டும் என்று பல அமெரிக்கர்கள் கேட்டுள்ளனர். ஒசாமா பின் லாடனைப் போல் என்னையும் வேட்டையாட வேண்டும் என்கிறார் சாரா பாலின். பன்னாட்டு அபாயம் என்று என்னை அறிவிக்க வேண்டும் என்று குடியரசுக்கட்சி சார்பில் ஒரு மசோதா தயாராகி வருகிறது. கனடா பிரதமர் அலுவலக ஆலோசகர் ஒருவர் தொலைக்காட்சியில் தோன்றி என்னைக் கொலை செய்துவிட வேண்டும் என்கிறார். ஆஸ்திரேலியாவில் இருக்கும் எனது 20 வயது மகனைக் கடத்தி, சித்தரவதைக்குள்ளாக்க வேண்டும் என்று அமெரிக்கர் ஒருவர் வலைத்தளத்தில் கோரியிருக்கிறார்.

இதுபற்றியெல்லாம் எந்தக்கவலையுமில்லாமல் இருக்கும் ஜூலியா கில்லார்டு மற்றும் அவரது அரசு பற்றி ஆஸ்திரேலியர்கள் யோசிக்க வேண்டும். ஆஸ்திரேலிய அரசின் அதிகாரங்கள் அனைத்தும் அமெரிக்காவின் கைவசம் இருப்பது போல் தோன்றுகிறது. எனது பாஸ்போர்ட்டை ரத்து செய்தா அல்லது வேவு பார்ப்பதா அல்லது விக்கிலீக்ஸ் ஆதரவாளர்களை தொந்தரவுக்குள்ளாக்குவதா என்ற வழிகளை ஆஸ்திரேலிய அரசு ஆய்வு செய்து வருகிறது. ஆஸ்திரேலியாவின் அரசு வழக்கறிஞரோ, தன்னால் முடிந்த அளவுக்கு அமெரிக்க விசாரணைக்கு உதவி ஆஸ்திரேலியர்களைக் கப்பலேற்றி அமெரிக்காவுக்கு அனுப்புவதற்கான அனைத்து வேலைகளையும் செய்கிறார்.
மற்ற ஊடகங்களைப் பற்றி பிரதமர் கில்லார்டு மற்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹில்லாரி கிளிண்டன் ஆகியோர் எதுவும் சொல்லவில்லை. ஏனென்றால், கார்டியன், நியூயார்க் டைம்ஸ் மற்றும் டெர் ஸ்பீஜல் ஆகியவை பழமையானது என்பதோடு, பெரிய ஊடக நிறுவனங்களாகும். விக்கிலீக்ஸ் புதியது மற்றும் சிறிய அளவுள்ளதாகும். செய்தி கொண்டு வந்தவரைக் கொலை செய்து உண்மையை மறைக்க கில்லார்டு அரசு விரும்புகிறது. ஆஸ்திரேலிய அரசு மற்றும் அரசியல் பேரங்கள் குறித்த தகவல்களையும் சேர்த்து மூடி மறைக்க முயற்சிக்கிறார்கள்.

கையாலாகாத ஆஸ்திரேலிய அரசு

இவ்வளவு மிரட்டல்கள் எனக்கு வந்திருப்பது குறித்து ஆஸ்திரேலிய அரசு என்ன செய்தது? தனது குடிமகன்களில் ஒருவரைப் பாதுகாக்க ஆஸ்திரேலிய பிரதமர் முயன்றிருப்பார் என்று நினைக்கலாம். அதுதான் இல்லை. பிரதமரும், அரசு வழக்கறிஞரும் பாரபட்சமில்லாமல் பணியைச் செய்ய வேண்டும் என்பது நியதி. தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் வேலையில் அவர்கள் இருப்பதால், அதை அவர்கள் செய்ய மாட்டார்கள். ஒவ்வொரு முறை உண்மையை வெளியிடும்போதும், "அய்யோ.. உயிர்களுக்கு ஆபத்து ஏற்படும்", "தேசியப் பாதுகாப்பு போச்சு", "படைகளைச் சந்திக்க நேரிடும்" என்றெல்லாம் கூக்குரலிடுகிறார்கள். அதன்பிறகு, விக்கிலீக்ஸ் வெளியிடுவதில் எந்தவித முக்கியத்துவமும் இல்லை என்றும் சொல்கிறார்கள். இதில் ஏதாவது ஒன்றாகத்தான் இருக்க முடியும். அது எது?

இரண்டுமே கிடையாது. நான்கு ஆண்டுகளாக விக்கிலீக்ஸ் செய்திகளைப் பிரசுரித்து வருகிறது. இந்தக் காலகட்டத்தில் ஒட்டுமொத்த அரசையே மாற்றியிருக்கிறோம். ஆனால் ஒரு தனிநபர்கூட இதனால் பாதிக்கப்படவில்லை. ஆனால், அமெரிக்காவோ, ஆஸ்திரேலியாவின் உதவியுடன், கடந்த சில மாதங்களில் ஆயிரக்காணவர்களைக் கொன்று தீர்த்துள்ளது. ஆப்கானிஸ்தான் போர் பற்றிய விபரங்கள் வெளியானதால் அமெரிக்காவின் உளவு வேலைகளோ அல்லது உளவு உத்திகளோ பாதிக்கப்படவில்லை என்று அமெரிக்க நாடாளுமன்றத்திடம் அந்நாட்டு ராணுவத்துறை அமைச்சர் ராபர்ட் கேட்ஸ்கடிதம் மூலம் தெரிவித்திருக்கிறார். நாம் விபரங்களை வெளிட்டதால் ஆஸ்திரேலியப் படைகளுக்கு எந்த பாதிப்பு ஏற்படவில்லை.

ஆனால் நமது வெளியீடுகள் பல அதிர்ச்சிகரமான தகவல்களை அம்பலப்படுத்தியுள்ளன.

* ஈரானைத் தாக்குமாறு சவூதி அரேபிய அரசர் அப்துல்லா அமெரிக்காவைக் கேட்டுக்கொண்டார்.

* இராக் தொடர்பாக பிரிட்டனில் நடத்தப்பட்ட விசாரணை அமெரிக்க நலன்களைப் பாதுகாக்கும்படி இருக்க வேண்டும் என்று நிர்ப்பந்தித்தார்கள்.

* நேட்டோ அமைப்பில் மறைமுக உறுப்பினராக ஸ்வீடன் உள்ளது.

* குவாண்டனாமோவில் இருக்கும் கைதிகளை மற்ற நாடுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அமெரிக்கா நிர்ப்பந்தித்தது. ஒரு கைதியை ஸ்லோவேனியா ஏற்றுக் கொண்டால்தான் அந்நாட்டு ஜனாதிபதியை ஒபாமா சந்திக்க முடியும் என்று கூறப்பட்டது.

பெண்டகன் ஆவணங்கள் வழக்கில், "சுதந்திர மற்றும் கட்டுப்பாடுகளற்ற ஊடகத்துறையே அரசின் தவறுகளை அம்பலப்படுத்தும்" என்று அமெரிக்காவின் உச்சநீதிமன்றம் குறிப்பிட்டது. உண்மைகளை வெளிக்கொண்டு வருவதற்கான உரிமை அனைத்து வகையான ஊடகங்களுக்கும் இருக்க வேண்டும் என்ற தேவையை விக்கிலீக்சைக் சுற்றி உருவாகியுள்ள நெருக்கடி உணர்த்துகிறது.

ஜூலியன் அசாங்கே

- தி ஆஸ்திரேலியன் நாளிதழில் வெளியான கட்டுரையின் ஒரு பகுதி.

நன்றி : கணேஷ் 

No comments:

Post a Comment