Saturday, December 11, 2010

ஒரு உள் குத்தாட்டம்!


ரண்டாம் தலைமுறை ஸ்பெக்ட்ரம் விவகாரம் உள்நாட்டு ஆட்சியாளர்களைப் பூதம் போல ஆட்டுவித்துக்கொண்டிருக்கிறது (ஸ்பெக்டர் என்றால் ஆங்கிலத்தில் பூதம் என்று பொருள்). அப்புறம் காமன் வெல்த் விளையாட்டுத் திடலில் விளையாடிய ஊழல் ஆட்டங்கள் சிரிப்பாய் சிரித்துக்கொண்டிருக்கின்றன. இப்படியாக தேசிய மட்டத்திலும் உள்ளூர் மட்டத்திலும் வெளிவந்துகொண்டிருக்கிற தில்லுமுல்லுத் திருவிளையாடல்களின் தட புடலில் சில உலகளாவிய கைவரிசைகள் கவனத்திற்கு வராமல் நழுவிடக்கூடும்.

நம் ஊடகங்கள் பெரிதாகக் கண்டுகொள்ளாத அபபடிப்பட்ட ஒரு கைவரிசை, அமெரிக்காவின் வால் தெரு வட்டாரத்தில் நடத்தப்பட்டிருக்கிறது. உலகளாவிய பங்குச் சூதாட்டத்தின் தலைமை தாதாக்கள் கோலோச்சுகிற இடம்தான் வாஷிங்டன் நகரின் பொருளாதார மையமான வால் தெரு. அங்கே நடந்திருக்கிற ஒரு பெரிய மோசடி பற்றி, அந்நாட்டுப் புலனாய்வு நிறுவனமான எப்ஃ.பி.ஐ விசாரிக்கத் தொடங்கியிருக்கிறது (அமெரிக்காவின் உள்நாட்டுக் குற்றச்செயல்களை விசாரிக்கிற அமைப்பு எஃ.பி.ஐ.; மற்ற நாடுகளின் அரசியல் முதல் வாழ்க்கை வரையில் மூக்கை நீட்டுவது சிஐஏ எனப்படும் மைய உளவு நிறுவனம்).

பங்குச் சந்தையின் அடிப்படையே பலரையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு ஆதாயங்களைக் குவிப்பதுதான். குறிப்பிட்ட நிறுவனப் பங்குகளால் அதிக ஆதாயம் கிடைக்கப்பபோவதை ஊகிக்கிறவர்கள், மற்றவர்கள் அதைப் பற்றித் தெரிந்துகொள்வதற்கு முன்பாகத் தாங்களே அந்த நிறுவனத்தின் பங்குகளைக் குறைந்த விலையில் அல்லது அப்போதைய சந்தை நிலவர விலையில் வாங்கிக்கொள்வார்கள். பின்னர், அந்தப் பங்குகள் பல மடங்கு அதிக விலைக்குப் போகிறபோது தங்கள் கையில் உள்ளதை புதிய விலைக்குத் தள்ளிவிட்டு பெருத்த லாபம் ஈட்டுவார்கள். அதே போல் குறிப்பிட்ட நிறுவனங்களின் பங்குவிற்பனையில் சரிவு ஏற்படலாம் என்கிறபோது அந்த உண்மையை மறைத்து, பங்குகளை மற்றவர்கள் தலைகளில் கட்டுவார்கள். அவற்றை வாங்கியவர்கள், உண்மை நிலையை அறியவருகிற போது கையில் இருப்பதை விற்க முடியாமல் பெருத்த இழப்புக்கு உள்ளாவார்கள்.

இப்படியான ஒரு மோசடி ஏற்பாடு பங்கு வியாபாரத்திலேயே இருக்கிறது. தொழில்களுக்குத் தேவையான முதலீடாக மாறாமல் வை ராஜா வை என்று பன்னாட்டு கார்ப்பரேட் மட்டத்தில் நடப்பது இது. பொருளாதாரச் சுழற்சி என்பது போன்ற முதலாளித்துவ சந்தைப் பொருளாதாரத்திற்கே உரிய கவர்ச்சிகரமான பெயர்களில் இந்த உள்ளே வெளியே ஆட்டங்கள் கவுரவப்படுத்தப்படுகின்றன.
இப்போது வால் தெருவில் நடந்திருப்பது அந்த மோசடிக்குள்ளேயே ஒரு உள் குத்து!

பங்குச் சந்தையில் பெரிய பெயர்களாக உள்ள சில நிறுவனங்களுக்கிடையே உள் வர்த்தகம் நடந்திருக்கிறது என்பதுதான் அந்த உள் குத்து. தினமும் பங்கு விலை நிலவரங்களைப் பார்த்து இரத்த ஓட்ட அலை எகிறி இறங்குகிற சாதாரண முதலீட்டாளர்களுக்குத் தெரியமாமல், வெளிப்படையான அறிவிப்புகள் எதுவும் செய்யமாமல் அந்த நிறுவனங்களுக்கிடையே ரகசியமான கொடுக்கல் வாங்கல்கள் நடந்திருக்கின்றன. இதனால், பங்கு விலைகள் இயல்பானதாக, உலகச் சந்தை நிலவரத்தைப் பொறுத்து ஏறி இறங்குகின்றன என்பதாக நம்பியிருக்கக்கூடிய அப்பாவி முதலீட்டாளர்கள் அப்பட்டமாக ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள்.

கோல்ட்மேன் சாஷ், பிரைமரி குளோபல் ரிசர்ச் எல்எல்சி போன்ற 14 நிறுவனங்கள் பங்குச் சந்தை உலகில் முக்கியமானவர்களாகக் கருதப்படுகிற நிதி நிறுவனங்களாகும். செயற்கையான பங்குவிலைப் பதற்றங்களை ஏற்படுத்துவதில் முன்னணியில் உள்ள இந்த நிறுவனங்கள், சூதாட்ட விதிகளை மீறி தங்களுக்குள்ளேயே உள் விற்பனை நடத்தியிருக்கின்றன. இந்த நிறுவனங்களின் செயல்பாடுகளை எப்.பி.ஐ. தன் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டுவந்திருக்கிறதாம்

இந்த உலகளாவிய அழுகுணியாட்டத்தில் இந்திய வல்லுநர்களும் இருக்கிறார்கள்! இது இந்தியாவுக்குப் பெருமையா என்பதை, சந்தைப் பொருளாதாரத்திற்கு சகல சுதந்திரங்களையும் வழங்கியாக வேண்டும் என்று வக்காலத்து வாங்குகிற இந்திய பொருளாதார வல்லுநர்கள்தான் சொல்ல வேண்டும். இன்டெல் கார்ப்பரேசன் நிறுவனத்தின் ராஜீவ் கோயல், கேலியன் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் ராஜ் ராஜரத்தினம், மெக் கின்சே அன் கம்பெனி நிறுவனத்தின் அனில் குமார் போன்றவர்களின் பெயர்கள் அடிபடுகின்றன. ஐபிஎம் நிறுவனத்தின் ராபர்ட் மொஃபாட் என்பவர் உள்ளிட்ட பலரும் இதிலே தங்களுடைய திறமையைக் காட்டியிருக்கிறார்கள்.

அந்த 14 நிறுவனங்களுக்கிடையேயான உள் வர்த்தகத்தில் சுமார் 200 லட்சம் டாலர் லாபம் சட்டவிரோதமாக ஈட்டப்பட்டிருக்கிறதாம்.
திருடர்களானாலும் அவர்களுக்குள் சில குறைந்தபட்ச நேர்மை கடைப்பிடிக்கப்ட வேண்டும் என்ற நடைமுறை விதிகள் உண்டு. அப்படி மீறுகிறபோது மோதல், கடத்தல், கொலை என்று பரபரப்புச் செய்திகளுக்குத் தீனிகள் கிடைக்கின்றன. இந்த உள் குத்தாட்கள் அந்த விதிகளை மீறியிருக்கிறார்கள்.

இதனால் ஒட்டுமொத்த நிதிச் சுரண்டல் அமைப்பே ஆட்டம் கண்டுவிடும்! மக்கள் முதலாளித்துவப் பாதையின் அபாயங்களைப் புரிந்துகொண்டு அதை மூடுவதற்குத் தயாராகிவிடுவார்கள். அப்படி மூடு விழா நடத்துகிற மூடு மக்களுக்கு வந்துவிடக்கூடாது! எனவே எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது என்ற மயக்கத்திலேயே மக்களை ஆழ்த்திவைத்தாக வேண்டும்! அதற்காகவே இப்படியொரு விசாரணைக்கு எஃபிஐ ஏவிவிடப்பட்டிருக்கிறது.

இதனை ஏதோ சிறிய முதலீட்டாளர்களும், பைத்தியக்காரத்தனமாக நேர்மையான வழிமுறையில் மட்டும் தொழில் செய்கிற நிறுவனங்கள் மட்டுமே பாதிக்கப்படுகிற பிரச்சனையாகப் பார்ப்பதற்கில்லை. இந்த மோசடியால் ஏற்படும் செயற்கையான பணவீக்க விளைவுகள் இறுதியில் நுகர்பொருள்களின் விலை உயர்வில் கொண்டுபோய் விட்டுவிடும். சொற்ப வருமானத்தில் அப்படியும் இப்படியுமாக மிச்சப்படுத்திப் பொருள்களை வாங்குகிற நீங்களும் நானும்தான் இந்தக் குற்றத்திற்கான தண்டனையை அனுபவித்தாக வேண்டும்.

ஏதோவொரு சினிமாவில், எங்க பார்த்தாலும் அநியாயம் மட்டுமே ஜெயிக்குதே என்பது போல் ஒரு வசனம் வரும். நமக்கும் இதற்கும் தொடர்பில்லை என்பது போல் ஒதுங்கியிருக்கிற வரையில் அநியாயம் ஜெயிப்பதைத் தடுக்க முடியாதுதான்.                  

COURTESY : ASHOKBLOGSPOT

No comments:

Post a Comment